Back

Philosophy

August 12, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

ஆகாசப் பரப்பில் நிலா போல்
உன்னில் ஏதோ ஒரு மூலையில்
நான் இருக்கலாம்
அல்லது இல்லாமலும் இருக்கலாம்
இருந்தாலும் என் இருத்தலை நீ
பொருட்படுத்தாமலும் இருக்கலாம்.

ஆனால் சகி,
உன்னை ஏந்தி இருந்த
என் மனத் தரை எங்கும்
நினைவின் வெள்ளம் கட்டறுத்தோடுகிறது.

நெரிசலும்
கரியமிலவாயும் மிகுந்த
பேருந்து நிலையத்தில்
நீயும் நானும்
தொட்டுக் கொள்ளாமல்
விரல் பட்டுக் கொள்ளாமல் பேசிக் கொண்ட
முதலும் முடிவுமான
அந்த சந்திப்பின் வாசனை
என் மனமெங்கும் வியாபித்து நிறைகிறது.

நீயற்ற வெறுமையின் உஷ்ணம்
வெடித்தலுக்காயத்தப்படும்
ஒரு எரிமலைக் குழம்பின் சூட்டோடு
என்னில் கண்ணீராய் வடிகிறது.

நானறியாத உன் உள்ளங்கையின் வியர்வை
பிசு பிசுப்புக்கு ஏங்கும்
என் விரல்களின் புலம்பல்
இப்படிக் கவிதை போல் விரிகிறது.

சகி,
உன்னில் துளியும் இல்லாத என்னுள்
கடலென மலையென வானென
விரிந்துயர்ந்திருக்கிறாய் நீ.

எது எப்படியோ
உனக்கெதும் புரியப் போவதில்லை.
நீ போனது போனதாகவே இருக்கட்டும்.

இறுதியாக
ஒரே ஒரு முறை
அன்பின் ரேகை படர்ந்த
உன் உள்ளங்கைளில்
என் முகம் ஏந்தேன்.
கொஞ்சம் அழுது விட்டு போகிறேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...