Philosophy
February 25, 2019
தத்துவம்
SHARE

இந்தக் கவிதைக்கும் பெண் புத்தி.
அத்தனை சுலபத்தில்
வந்துவிடுவதோ
பிடிக்குள் சிக்கி விடுவதோ இல்லை.
காத்திருக்க வேண்டும்.
ஊழிப் பொழுதாய்
ஒரு சொல்லின் மேல் அல்லது
ஒரு கணத்தின் மேல் அல்லது
ஒரு காட்சியின் மேல் அலலது
ஏதோ ஒன்றில் அமர்ந்தோ நின்றோ
காத்திருக்க வேண்டும்.
ஆடி அசைந்து
நடந்து தவழ்ந்து
நழுவி தழுவி
உருண்டு திரண்டு
சிந்தி சிதறி
தோன்ற மறுக்கும் தெய்வமாய்
கட்டிலில் இசைய மறுக்கும் பெண்ணாய்
மரத்தில் ஆங்கும் இங்கும் தாவும் அணிலாய்
குதித்து குலுங்கி ஓடும் முயலாய்
ஆழத்துளையிட்ட குழாயிலிருந்து நீராய்
ஒரு மேகத்தை விட்டு நழுவி விழும் மழை துளியாய்
குழந்தையின் குஞ்சு மணியில் இருந்து
தன் போக்கில்
தண்ணீர் ரயிலாயொழுகும் மூத்திரமாய்
ஆடி அசைந்து
நடந்து தவழ்ந்து
நழுவி தழுவி
உருண்டு திரண்டு
சிந்தி சிதறி
அதுவாக வரும் போது வரும்.
அதுவரை
ஒரு புள்ளியில் அல்லது
ஒரு எழுத்தில் அல்லது
ஏதுமில்லாமலேனும்
காத்திருக்க வேண்டும்
ஊழிப் பொழுதாய்.
அதுவாக வரும் போது வரும்.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...