Philosophy
January 1, 2018
தத்துவம்
SHARE

#நானும்_என்_வாழ்க்கையும்.
வாழ்க்கை ரொம்ப வசீகரமானது. இல்லாத துக்கங்களையும் துரோங்களையும் வலிகளையும் கொடுத்தாலும் அதற்கடுத்து ஏதேனும் ஒரு வழியில் சந்தோசத்திற்கு அழைத்து போய் விடும்.
என் வாழ்க்கையும் அப்படி தான். ஆனால் என் வாழ்க்கையின் எல்லாத்தையும் எழுதி விட முடியாது. எழுதினாலும் படிக்க முடியாது. படித்தாலும், படித்த பின் என் மீதான மதிப்பும் மரியாதையும் அதே நிலையில்
இருக்காது. ஆக மறைக்க வேண்டிய இடங்களை மறைந்தும் மழுப்ப வேண்டிய இடங்களை மழுப்பியும்... சில இடங்களை பூசி மொழுகியும் எழுதுகிறேன்.
#அத்தியாயம்_1
என் வீட்டில் நான் கடைக்குட்டியும் அல்லாத மூத்ததும் அல்லாத நடுக்குட்டி.
கடைக்குட்டியாக இருந்தால் செல்லம் அதிகமாய் இருக்கும். மூத்தபுள்ளயாக இருந்தால் அதிகாரம் அதிகமாய் இருக்கும். ஆனால் நடுக்குட்டிக்கு?
ஊரில் ஒரு பழமொழி உண்டு.
"முன்ன பொறந்து மோல பின்ன பொறந்தது காள" னு. இதில் கூட "இடையில் பிறந்தது" இல்லை.
ஆனால் என் வீட்டில் இப்படி இல்லை. எல்லாமும் எனக்கு தான் அதிகம். (அடியும் தான். .)
என் உடன் பிறப்புகள். ஒரு அக்கா. ஒரு தம்பி. இவர்களுக்கு இடையில் நான் நீண்ட நாள் வேண்டுதலுக்கு பின் பிறந்தவன். என் அக்கா க்கும் எனக்கும் ஐந்து வருடம் வித்தியாசம்.
என் ஊர் கிராமம். என் வீடு ஒரு சின்ன கூரை வீடு.ரொம்ப வசதி இல்லை. ஆனால் சந்தோசம் நிறைய உண்டு. கூடவே துக்கமும்.மேடென்று இருந்தால் பள்ளமும் இருந்து தானே ஆக வேண்டும். அது தானே நியதி. எதையோ சொல்ல
வந்து எதையோ சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
// \\
நான் வயிற்றில் இருந்த போது அம்மா காவி கல், செம்மண் எல்லாம் நிறைய தின்பாளாம். மசக்கை க்கு மாங்காய் தின்பத்தை விட செம்மண் தின்பதில் கிராமத்து கர்ப்பிணிகளுக்கு அலாதி பிரியம். அப்படி தான் என்
அம்மா க்கும்.
இதனாலோ என்னவோ என் பிரசவம் மட்டும் ஆஸ்பத்திரியில். அக்காவும் தம்பியும் சுகப்பிரசவம் தான். இதில் தம்பி பிறந்தது இதை விட பெரிய கூத்து. அதை இன்னொரு நாள் சொல்கிறேன்.
நான் பிறந்ததும் ஐ சி யூ ல் வச்சிட்டாங்களாம். ஒரு மாசம் ஆஸ்பத்திரியிலயே இருக்கனும் னு சொல்லிட்டாங்களாம். ஏன்? எதுக்கு? னு கேட்டதுக்கு மூள வளர்ச்சி இல்ல னு சொல்லிட்டாங்களாம்.
டாக்டர் இப்படி சொன்னதும் என் வீட்ல் எல்லாருக்கும் பயமாகி போச்சு. ஏனென்றால் தவமாய் தவமிருந்து வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டி பெற்ற "பையன்" ஆச்சே. (பொண்ணா இருந்திருந்தா என்னைய போட்டு
தள்ளிருப்பாங்களோ எனன்வோ). உடனே பிறந்த தேதியையும் நேர்த்தையும் குறித்து கொண்டு ஜோதிடரை நாடி போனால் .. அவன் இன்னும் பீதிய கிளப்பி விட்டு இருக்கான்."இது லாம் தேறாது" னு சொல்லிட்டானாம்.
" எரியுற அடுப்புல எண்ணெய ஊத்துற கணக்காக "அவன் பங்குக்கு கொஞ்சம் ஏத்தி விட்டுட்டான்.
உடனே இவர்கள் மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு போய் பண்ணாத அலப்பற பண்ணி ... அழுது புலம்ப...." ஒன்னும் ஆகாது... பையன் நல்லா தான் இருக்கான் பொழச்சிப்பான்..." னு டாக்டர் சொல்லவும் தான் கொஞ்சம்
நிம்மதி ஆகி யிருக்காங்க.
இப்படி வீட்டையே ஆட்டி படைச்சு பிறந்தவன் தான் இந்த "நான்".
- மீண்டும் வருவேன்
(பி. கு:தோனுறப்போ எழுதுவேன். ஆனாலும் இது தொடர் தான்)
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...