Philosophy
October 12, 2017
தத்துவம்
SHARE

கண்ணும் வாயும் காதும் மூக்கும்
இன்னும் இருக்கும் எலும்பும் தோலும்
எண்ணிக்கையில் யாதும் யார்க்கும் ஒன்றே
கண்ணுக்கு மறைவாய் ஓடும் குருதியும்
கைப்பிடி யளவு துடிக்கும் இதயமும்
எப்படி உனக்கோ அப்படி எனக்கும்
இருக்கும் போது இடையில் எங்கே
இருந்து வந்ததோ பேதம் பேசும்
சாதியும் மதமும்? சாகும் மட்டும்
வீதி வீடு நாடென இருக்கும்
இடத்தில் எல்லாம் அடித்து கொண்டு
மடமை கொண்டும் மனிதம் கொன்றும்
ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும்
கரும்பாறை என்று கருணை யற்றும்
மரித்து போக நாமென்ன நன்றறியா
நரியா நாயா? அறிவாறு கொண்ட
மனிதக் கூட்டமடா! மடையா மறந்து
இனியும் இல்லாத தாழ்வுகள் பேசி
கூடி வாழும் குணத்தை கொன்று
மாடி வீட்டில் மனையொடு வாழ்வதில்
இல்லை சுகமேதும்! இதயம் துறந்து
இல்லார் மீதும் இரக்கம் செலுத்து
அதில்தான் உள்ளது அலாதி இன்பம்
பதிலேதும் பேசாமல் புத்தியில் சேர்ப்பி
புத்தியில் உள்ளதை வாழ்வில் ஏற்று
புத்தம் புதிதாய் மனதை மாற்று.
மனதில் நிறைய மனிதம் ஊற்று.
இனிதே வீசட்டும் இன்பக் காற்று.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...