Back

Letter

January 29, 2020

தற்கொலை முயற்சி

SHARE

தற்கொலை முயற்சி

அன்பில் தோய்ந்த வணக்கங்கள்,

எல்லோரும் நலமாயிருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த கடிதத்தைத் தொடங்குகிறேன். நலமாயில்லா விட்டால் வருந்த வேண்டாம். எனக்கு தெரிந்து, உலகில் எல்லோர்க்கும் இருக்கிற ஒரு பொதுவான ஒற்றுமை கஷ்டம் தான். சந்தோசம் இல்லாதவர்கள் உண்டு ஆனால் கஷ்டம் இல்லாதவர்கள் இல்லவே இல்லை. சரி அது ஒரு புறம் இருக்கட்டும். நேரமிருந்தால் தொடர்ந்து வாசியுங்கள். இந்த கடிதம் எல்லோர்க்குமானது. அந்தக், கஷ்டத்தைப் போலவே இந்த கடிதமும் பொதுவுடைமை தான். "இந்த லெட்டர் யாருக்கானது?" என உங்கள் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் சொல்லி விட்டேன். இனி "எத பத்தி? என்னவா இருக்கும்?" என்று மனதை அறுத்துக் கொண்டிருக்கும் கேள்விக்கு பதில் சொல்லும் முன் சில பல விசயங்கள் பேச வேண்டி இருக்கிறது. அதைப் பேசி விட்டு பிறகு கடிதத்தின் கருவுக்குள் போவோம்.

ம்ம் எதைப் பற்றி பேசுவது? அன்பு. அன்பை பற்றி பேசுவோம். நடந்தோ பஸ்லயோ போறப்போ தெரிஞ்சோ தெரியாமலோ யார் மேலாவது நாம் மோதிட்டா sorry சொல்றப்போ அவங்க பரவாயில்ல விடுங்க னு ஒரு புன்னகை செய்றப்போ, ஐயோ இடிச்சிட்டமே ன்ற குற்ற உணர்வு போயி நம்ம உதட்டுலயும் ஒரு குறு நகை மலருது இல்லையா? இது தான் அன்போட மகிமை. அன்பு என்பது புன்னகையின் பூமி. அன்பு நீரில்லாத பூமியிலும் பூக்களை மலர்த்தும். அன்புக்கு மன்னிக்க மட்டுமே தெரியும். அன்பு மனதின் சகல காயத்திற்குமான மருந்து. அன்பு ஆத்மாவின்..... ஒரு நிமிசம். ம்ம். குடித்தால் ஒரு போல கிறு கிறுப்பாக தள்ளாட்டமாக இருக்கிறது. அது ஏதோ McDowell's No. 1. Sweet brandy தேடினேன். அகப்படவில்லை. இந்த Mc பிலா பிலா, கிக்காக இருக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஒரு half வாங்கி ஜபங் கொபங் குபாங் பண்ணி விட்டேன். உண்மையிலேயே கசப்பாக இருந்தாலும் கிக்காக, கிறு கிறுப்பாகத் தான் இருக்கிறது. எல்லாத்திலுமே அவசரம். ராவ் ஆக வேறு குடித்து விட்டேன். இப்போது தொண்டை வயிறு எல்லாம் வேறு எரிகிறது. ச்சைக். விழுந்து விட்டேன். இனி no குடி. Be steady. OK. Let's talk about the matter. Matter என்றதும் வேறு எங்கேனும் எண்ணத்தைப் போக விடாதீர்கள். (“Matter is the main matter of the world’s existence—
and some ‘matter’ keeps it going.”) உரையாடலை எங்கு விட்டேன்? எழுதிக் கொண்டே இரண்டாம் பக்கம் வேறு வந்து விட்டேன். யாரு தாளைப் புரட்டுவது. நீங்க நினைக்கிற அந்த வாழப் பழ சோம்பேறி நான் தான். ஆமாம் உங்களுக்கு கல்யாண்ஜி தெரியுமா?

"இருந்து என்ன ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்”

என்று எழுதியவர் அவர் தான். ரொம்ப உத்வேகமான வரி இல்லையா? எதற்கு சாக வேண்டும் என்கிற கேள்வியை முன் வைக்கிற கவிதை. இருந்தால் நிறைய தொல்லைகள். செத்து விட்டால் எந்த தொல்லையும் இல்லை . குறிப்பாக நினைவுத் தொல்லை இல்லை. ஏன், (யாரும் /எதுவும்) இல்லை என்கிற தொல்லை கூட இல்லை. 2014 இல் என்று நினைக்கிறேன். தின தந்தி மாணவர் ஸ்பெசலில் நான் எழுதிய வரி கூட இப்படித் தான் இருக்கும்ம்ம்.... ஆங் "சாவதற்கு வேண்டிய துணிவில் சரி பாதி போதும் வாழ்வதற்கு." இது தான் அந்த வரி. நல்லா இருக்கில்லையா.? வாசிக்க நல்லா தான் இருக்கு. ஆனா வாழ? வாழ்தல் கொடிமையிலும் கொடுமையாக அல்லவா இருக்கிறது.

உண்மையில் இப்படி , மனம் உடைந்து செத்து போய் விடலாமா என்று யோசிக்கும் சமயத்தில் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று தான் கற்று கொண்ட மொத்தத்தையும் சொல்லி பிளேடு போடுவார்கள். அப்போதெல்லாம் தற்கொலை எண்ணம் போய் அவர்களை கொன்று விடத் துடிக்கும் மனசு. அதனால் தான் யாரோடும் பேசாமல் , எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கடிதம் எதைப் பற்றியது என்று சொல்ல வேண்டிய இடத்திற்கு வந்து விட்டதாய் உணருகிறேன். இது என் இரண்டாம் தற்கொலை முயற்சி அல்லது தற்கொலைக் கடிதம். தற்கொலை முயற்சி? சாகாமல் உயிரோடு வந்து விட்டால் "தற்கொலை முயற்சி". செத்து விட்டால்? "தற்கொலை வெற்றி" என்று வைத்து கொள்ளுங்கள். ஆமாம் "தற்கொலை வெற்றி" இந்த சொல்லாக்கம் சரியா? சரியா தப்பா னு ஆராய வேண்டிய இடமா இது? என்ன இழவோ? ஆமாம் இழவு தான். பாருங்களேன். ஏதேச்சையான பேச்சு கூட சாவைப்பற்றிதாக இருக்கிறது. சாவு என்ற உடனே நினைவில் ஏதோ பிசிறிடுகிறது. ஒரு நிமிசம். ஜி. நாகராஜனின் "குறத்தி முடுக்கு" படித்திருக்கிறீர்களா? என்னை பொறுத்த வரை இவருடைய எழுத்துகள் எல்லாம் எதார்த்தக் காணொளி. வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்ட வல்லது. "நாளை மற்றுமொரு நாளே" வும் அப்படியான நாவல் தான். இரண்டிலுமே முக்கிய பாத்திரங்கள் பாலியல் தொழிலாளிகள் தான். இந்த இரண்டில் என்னை மிகவும் கவர்ந்த நாவல் எது என்றால் குறத்தி முடுக்கு தான். ஒரு உயிரோட்டமான, மிகவும் சாதாரணமான, எதார்த்தமான காதல் கதை. நாகராஜனின் எழுத்துக்கள், என்னைப் போலவே, காமத்தை வெளிப்படையாக பேசக் கூடியவை. காதலை தெய்வீகப் படுத்துவதில்லை. "ஆணுக்கு பெண் தேவை. பெண்ணுக்கு ஆண்தேவை. குழந்தை வளர்ப்பு என்ற தொல்லையை சமாளிக்கவே குடும்பம் என்ற அமைப்பு உருவாக்கபடுகிறது. காமத்தை தீர்த்துக் கொள்ள வழிகள் இருக்கும் வரை குடும்பம் தேவைப்படாது " என்று வெளிப்படையாக, உண்மையை பேச வல்லவர்கள் இவருடைய பாத்திரங்கள். இந்த நாவலைப் பற்றி பேசும் போது 2016 ல் நான் எழுதிய அபலை கவிதை நினைவுக்கு வருகிறது.

"என் உடம்பில்
நரம்புகளை விட
நகக் கீறல்கள் அதிகம்.
அங்கத்தில்
எங்கெல்லாம் முடியுமோ
அங்கெல்லாம் எச்சில்பட்டவள்.
கட்டில் சத்தங்களில்
சங்கீதம் கற்றவள்.
எடைக் கருவி
தாங்காத எடையும்
என் தொடைத்தசை தாங்கும்.
என் மேடு பள்ளங்களில்
ஊடாடி உயிர்கறையவே
சில ஜீவன்கள் ஏங்கும்.
எனக்கு
நிர்வாணம் அவமானமல்ல.
காட்சிப் பொருளாகி போன
கவலையுமில்லை.
காசுகொடுத்து
கட்டிலுக்கு அழைப்பார் மத்தியில்
என்னை மாமிச புதையலாகவே
மதிப்பார் மத்தியில்
என் மீதும் நேசம் செய்யும்
அவனே என் கவலை.!
அதை எண்ணி அழுகிறேன்
நானுமோர் அபலை.!!!!"

இது தான் அந்தக் கவிதை. ஆமாம் குறத்தி முடுக்கில் வருகிற மரகதம் ஏறத்தாழ இதுபோலான ஒரு பாத்திரம் தான். ஐய்யோ. எங்கோ தொடங்கி எங்கோ வந்து விட்டேன். நான் பேச வந்தது மரகதம் பற்றி இல்லை. தேவா...excuse me. மூ.. ச்சைக். ஒரு நிமிசம்.ம். ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தேன். ஆமாம் யாரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்? தேவானை பற்றி. அவள் சாக நினைத்து தூக்கு மாட்ட முயற்சித்து கயிறு அறுந்து விழுந்து பிழைத்துக் கொள்ளுவாள். வாழ்க்கை அவளை நிம்மதியாக சாகக் கூட விடாது. குடித்து விட்டு பயங்கரமாக உளறிக் கொண்டு இருக்கிறேன். நான் பேச வந்தது தேவானைப் பற்றி கூட இல்லை. என் தற்கொலைப் பற்றி. கொஞ்ச நாளாக எதுவுமே சரி இல்லை. எதுவுமே என்றால்? எல்லாமே தான். மிகத் தீவிரமாக நேசித்தவர்களால், நிராகரிக்கப்படுகிற /வெறுக்கப்படுகிற கணம் ரொம்ப கொடுமையானது இல்லையா? ஆமாம், அன்பு இல்லை. எனக்கு சகி இல்லை. சகலமும் இல்லை. நான் முன்பு போல வாசிப்பது இல்லை. எழுத்தே என் உயிர் என்று சொல்லி விட்டு கொஞ்சம் கூட எழுதுவது இல்லை. Then, why should I live? அதான் சாகப் போகிறேன்.

விடாய் நின்று
முடி நரைத்து
நிமிர் முலை தளர்ந்தாலும்
என்னை நீங்க மாட்டேனென்று
நீ உரைத்த
உன் சொல்லறுந்து விழுந்தது போல்
இந்தக் கயிறும்
அறுந்து விடக் கூடாதென
எனக்காக
உன் கர்த்தரிடம்
கருணை கோரு சகி.

ஆரம்பத்தில் சாவதைப் பற்றி நினைக்கும் போது பயமாக இருந்தது. இப்போது? இல்லவே இல்லை. அந்த பயத்த போக்கிக்கத் தான் குடிச்சேன். முதல் தற்கொலை கடிதத்திற்கும், இந்த தற்கொலை முயற்சிக்கும் ஏறத்தாழ ஓராண்டு கால இடைவெளி இருக்கிறது. தற்கொலை முயற்சியில் ஓரளவு அனுபவம் கூட இருக்கிறது. அந்த அனுபவம் தான் தற்கொலை முயற்சிக்கு முன்னதாக குடிக்கச் சொல்லி அறிவுரை சொல்லியது. போன முறை பயம் இருந்தது. அதனால் தற்கொலை முயற்சி வெறும் கடித்தத்தோடு மட்டும் நின்று விட்டது. இப்போது பயம் இல்லை. தற்கொலைக் கடிதம் தற்கொலை முயற்சியைத் தாண்டி மேற் சொன்ன படி தற்கொலை வெற்றியாகக் கூட ஆகலாம். அப்படி செத்து விட்டால் கொஞ்சமாய் அழுது விட்டு புதைத்து விடுங்கள். எரிக்க வேண்டாம். நெருப்பு சுடும். ச்சைக். என்ன ஒரு non sense. செத்து போனதுக்கு அப்பறம் எப்படி சுடும் சுடாது என்கிற sense இருக்கும்? I am not in conscious. வாயெல்லாம் குழறுது. புத்தி பிசகுது. ஒரு வேளை அந்த குறத்தி முடுக்கு தேவானைப் போல நானும் கயிறு அறந்து விழுந்து பிழைத்துக் கொண்டால்? பிழைத்து கொண்டால்? ஏன்டா இப்படி பண்ண என்னைய லாம் நீ நினைச்சு பார்க்கலயா டா என்ற கேள்விகள் எதுமின்றி கொஞ்சம் அன்பு செய்யுங்கள். போதும். போகிறேன். சாகாமல் பிழைத்தால் வருகிறேன்.

ஆமாம் சகி,

நாளை
என் தற்கொலை குறித்து
ஆளாளுக்கு
ஒரு ஒரு விதமாய்
பேசுவார்கள்
ஆமாம்
நீ என்ன விதமாய்
பேசுவாய் சகி?
தயவு செய்து
அப்போதேனும்
கொஞ்சம் அன்பாய் பேசேன்.

அல்லது, இப்படி

❣️நீயறியா பொழுதொன்றில்
நான் இறந்திருக்க கூடும்.
❣️ஏதேதோ
நினைவுகளின் நெரிசலினிடையில்
என்னை நினைக்க மறந்திருப்பாய்
அல்லது என் சாவுக்கு
அஞ்சலி செலுத்த உனக்கு நேரமிருந்திருக்காது. .
❣️மீண்டுமென் ஞாபகம் வரும் அல்லது
நேரம் கிடைக்கும் வேளையில்
என்னை தேடுவாயா? என்பதும்
நேரமிருந்தாலும் என் ஞாபகம்
உனக்கு மீளுமா என்பதும்
எனக்கு இதுவரையில் தெரிந்திருக்க வில்லை.
❣️இறந்த பின்னும்
உன்னிந்த கண்டுகொள்ளாமை எண்ணி
என் ஆத்ம
சில காலம் அழுது தீர்க்கும்.
❣️ஏன் சாந்தியடையா
ஆத்மாக்கள் பேயாய்
அலைவதுண்டாமே...
அப்படி நானும் அலைந்தாலும் அலை வேன்.
❣️பயப்படாதே
உன்னை எதாவது
செய்வதெல்லாம் என் ஆசையாயிருக்காது..
❣️நீ பயந்து நடுங்குமந்த பேய் பொழுதிலேனும்
என்னை நினைத்து கொஞ்சம்
அழுது விடு.... அவ்வளவுதான்...
உன் அன்பிலுறிய
அந்த துளிகளை எண்ணி பார்த்து எண்ணி பார்த்தே
என் ஆத்ம சாந்தி அடைவேன்.

நன்றி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...