Poem
September 26, 2018
கவிதை
SHARE

அன்புள்ள சகி,
என் உடலுக்கொரு கேடுமில்லை. நலமாய் தான் இருக்கிறது .நீ நலமா? என்ன செய்கிறாய்? எங்கு இருக்கிறாய்? உன் இல்லாமையை தவிர, சொல்லிக் கொள்கிற படி எனக்கொரு குறையுமில்லை. எப்போது வருவாய் என்னிடத்து? என்
வானம், பூமி எல்லாமும் வெறுமையாக கிடக்கிறது. நீ எப்போது வந்து, அதை எல்லாம் நிரப்ப போகிறாய்? நேசக் கொண்டாட்டம் எல்லாம் சில காலம் தானா? அதற்கு பிறகு எல்லோரும் எல்லோர்க்கும் இளக்காரத்துக்கு
பாத்திரமாகி விடுவோமா? நானும் அப்படி தான் ஆகி விட்டேனா சகி ? சாய வாசம் வீசும் புது புத்தகத்தை முகர்ந்து முகர்ந்து பார்த்து கொண்டாடும் குழந்தையை போல் அத்தனை குதூகலத்தோடு கொண்டாடினாயே என்னை?
இப்போது என்ன ஆனது? உன் நேசம் எங்கு போனது? பழக பழக பாலும் புளிக்கும் என்பார்களே. நான் பழையதாகி புளித்து விட்டேனா? இல்லை சகி. இன்னும் உன்னுடைய, உனக்கான நானாகத் தான் இருக்கிறேன் நான். எனக்கு
தெரியும், உன் கொண்டாட்டம் உண்மை. உன் நேசம் உண்மை. அன்பை போலி எனச் சொல்வது அலை ஓசையில் பிழை சொல் வதற்கு சமம். அதுவும் உன் அன்பை குறை சொன்னால் என் நாக்கில் புழு வைக்கும். தங்கமே.. வந்து
தொலையேன். உறவில் உண்டாகிற இடைக்கால பிரிவு சிநேகத்தை அதிகமாக்கும் என்று சொன்னேனே அதற்காகவா இந்த பிரிவதிகாரம்? அன்பு - தேய்க்க மணக்கும் சந்தனம் - தேய்பிறை பொழுதிலும் ஒளிரும் நிலா - புதைக்க
முளைக்கும் விதை. புரிந்து கொள் சகி. பிரிவால் பிரியம் குறையாது.மிகை படத்தான் செய்யும். இந்த நேச நெருப்பு மட்டும் விலக விலக சுடும். நெருங்க நெருங்க குளிரும். சகி உன் நினைவுகள் வளர்ந்து கொண்டே
போகிறது. அதுவும் ஒளியுண்ணும் இரவென என்னை தின்று வளர்ந்து கொண்டிருக்கிறது. உன் நினைவு, கரையான் போல மெல்ல மெல்ல என்னை தின்று தீர்த்து கொண்டிருக்கிறது.சகி போதும் . உன்னை அன்பு செய்யவேனும், நான்
கொஞ்சம் மிச்சபடுகிறேன். வந்தென்னில் தொலையேன்.
பிரியமுடன்
உன் பழைய "நான்"
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...