Back

Poem

September 26, 2018

கவிதை

SHARE

கவிதை

#ஒரு_கூடை_கருவாடும்_ஒரு_முழம்_மல்லிகையும்

பின் கொசுவத்தோடு
கணுக்கால் தெரிய
சரிவும் குழைவுமாய் கட்டிய
நூல் புடவை.

நிலை தப்பிய மாரப்பால்
வேர்வை ஈரம் பட்ட ஜாக்கெட்டில் இருந்து
தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும்
மடித்த நூறு ரூபாய் நோட்டு.

கழுத்தில் ஆடுகிற
மஞ்சள் தாலியில் கோர்க்கப்பட்ட
இரும்புச் சாவி.

குதிங்கால் தேய்ந்த
பாரகான் செருப்பு.

நெற்றியில் வழிகிற வேர்வையை
துடைத்து விட்டு
இடுப்பில் சொருகப்படுகிற முந்தானை.

"செருப்பாச்சி சிலேபி வெலாங்கு....
ரூவாய்க்கு மூனு
தேனொழுகுற கருவாடு "
என்ற
எந்த ராகத்திலும் சேராத கருவாட்டு கூவல்.

எண்ணெய் வைத்து அழுந்த வாரி கொண்டையிட்ட கூந்தலை சுற்றிய
காட்டு மல்லி வாசம்.

மல்லிகை வாசனையை முறியடித்து
முந்திக் கொண்டு வீசுகிற கருவாட்டு நாற்றம்.

ஆகிய இத்தனை அடையாளங்களோடும் கூடை நிறைய கருவாட்டோடும்
அந்தி சாய்கிற நேரத்தில்
உச்ச ஸ்தாயி யில் கூவிக் கொண்டே ஊருக்குள் வருவாள்.

எப்படியும் அவள்
வீடு திரும்ப
ராத்திரி பத்து மணி ஆகிவிடும்.

அந்த நேரத்தில்
அவள் கூடையில் கருவாடும் இருக்காது.
கூந்தலில் மல்லிகையும் இருக்காது.

Ajithkumar Ajithkumar R

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...