Article
July 17, 2019
கட்டுரை
SHARE

எவ்வளவு தான் மறுத்துரைத்தாலும் அன்பின்றி வாழ்தல் என்பது குதிரைக் கொம்பான காரியம். பரிசுத்த அன்பின் ஸ்பரிசம் பிறந்த குழந்தையின் பிஞ்சு விரல் தொடுகை. யார் யாரோ வந்தார்கள் போனார்கள். நினைவாகி
நின்று தேங்கி போயிருக்கிறார்கள். ஒவ்வொரு உறவையும் மறுத்து பின் ஏற்று, பிரிவுகள் பல கடந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு உறவுக்கும் பிரிவுக்கும் இடையில் நிறைய பக்குவப்பட்டிருக்கிறேன். அழுது உடைந்து
மறு உருவாக்கம் பெற்றிருக்கிறேன். இப்போ அன்பின் உன்னதத்தை உணர்ந்து கொண்டேன். யாரையும் நிராகரிப்பதாய் இல்லை. யாரோடும் சண்டை செய்வதாய் இல்லை. எல்லோரிடத்திலும் அன்பு செய்யப்போகிறேன்.
"யாரும் வேண்டாம்
எல்லோரும் தூரப்போங்கள்.
பூக்கள் நூறு
தேன் சுமந்து விரிகிறது.
ஈக்கள் போல
இளகி மனஞ்சரிகிறது.
நாக்கில் நஞ்சு வைத்து
நல்லுறவும் புரிகிறது.
பாக்கள் பாடும் போது
பட்ட வலி தெரிகிறது.
நெஞ்சு எரிகிறது.
நிஜமும் தெரிகிறது.
துளிகள் தெறிக்கிறது.
விழிகள் உப்பு கரிக்கிறது.
ஆமாம்
நான் தேடும் அமுத அன்பு
இந்த நல்லுலகில் இல்லை இல்லை.
வான் வாழும் எமன் போல
என்னால் தினம் தொல்லை தொல்லை.
ஆக
யாரும் வேண்டாம்
எல்லோரும் தூரப்போங்கள். " - என்று
தத்துவப் புலம்பல் செய்து தாடி வளர்த்து , சோகம் பாடி பாடி தேகம் இளைத்து தேய்ந்த என்னை மீட்டெடுத்து திகட்ட திகட்ட, சலிக்க சலிக்க, பிரிவின் நினைவுகள் வலிக்க வலிக்க அன்பு செய்வதென்றும், உறவுகளை
கொண்டாடி தீர்ப்பதென்றும் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டேன். வாருங்கள். பிரியும் நாள் வரை தீராத பிரியம் செய்வோம். பிரிவும் தருவாய் இதழ்கடையில் புன்னகையொழுக பிரிவோம்.
பழைய "இதயத்தில் நீ" படத்தில் சுசீலா பாடினதை போல்
"உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவு இருக்கும்."
இது தான் எதார்த்தம். இதுதான் சத்தியமும் கூட. எந்த உறவும் நிரந்தரமானதில்லை. பிரிவுகள் நிச்சயமானவை. அதற்கென்று பிரியத்தானே போகிறோம் எதற்கு உறவு என்று கேட்பது, உறவை நிரகாரிப்பதெல்லாம் முத்திய
பித்து நிலை.
இருப்பை கொண்டாடுங்கள். எதார்த்தத்தை ஏற்க பழகுங்கள். வாழ்க்கை என்பது அனுபவம். அனுபவியுங்கள். வலிகளுக்கு பழக்கப்படுங்கள். எல்லாமே தற்காலிகம் தான்.இந்த உயிர், இந்த உடல், இந்த உலகம் எல்லாம்
எல்லாம் மாயப் பெருவெளி. இதில் அன்பென்பது தூயச் சிறு ஒளி. வாழ்வின் மீது வெளிச்சம் பாய்ச்சும் ஒற்றை சுடர். வாழ்தலை அர்த்தப் படுத்தும் ஒற்றை சொல். அன்பு செய்யுங்கள்.அன்பு செய்தல் என்பது mutual
process. இங்கு கொடுக்கல் வாங்கல் என்பதெல்லாம் இல்லை. அன்பு செய்யுங்கள். அன்பை விதையுங்கள். அன்பு விளைச்சலாக்குங்கள்.
அன்பே நித்தியம். ❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...