Article
September 28, 2018
கட்டுரை
SHARE

அன்புள்ள சகி
பிரிந்து விடுவோம். அது தான் நம்மிருவர்க்கும் நல்லது. உனக்கும் எனக்கும் இடையில் பெருங் கடலென ஏதோ ஒன்று ஓடுகிறது.அது ஈகோவா.? உன் இயலாமையா? இல்லை என் போதாமையா? எது வென சரியாகத் தெரியவில்லை.
எதுவாயினும் தனித்திருக்க பழகு. என்னை விட உனக்கு நல்ல துணையாகும்.அது உனக்கு ஆறுதலாய் இருக்குமே யொழிய ஆறுதல் தேட வைக்காது. ஒரு மேகத்தை போல மாறிக் கொண்டே இருக்கிறது என் மனநிலை. வா என்கிறேன். வந்த
பின் போ என்கிறேன். முற்றிய கிறுக்கு நிலையில் நான். என் அன்பின் தேடலும் தேவையும் ஓய்வதோ தீர்வதோ இல்லை. ஏற்கெனவே சொன்னதை போல், நான் வருவதை எல்லாம் வாங்கிக் கொள்வேன். தருவதென்பதை தவறியும் செய்ய
மாட்டேன். என் இதயம், பெர்முடா அல்லது கருந்துளை. நீ எவ்வளவு தான் அன்பை கொட்டினாலும் நிரம்பாது. வெற்றிடமாகத் தான் தோற்றமளிக்கும். அது மட்டுமின்றி எப்போதும் அது தன் போதாமையை சொல்லியே புலம்பி
கொண்டிருக்கும்.
சகி, உன் மேலொரு குறையுமில்லை. நீ பேரன்பி- நேச கடல் - நெடு நீண்ட வானம். உன்னை குறை சொன்னால் இந்த உலகமே எனக்கு தோற்றபிழை. ஆனால் என் பித்து நிலையால் நீ தான் துயர் படுகிறாய். என்னால் தினமும்
நேசவதையுறுகிறாய். போதும் சகி. போகிறேன். என்னால் நீ துயர்படுவதில் எனக்கு உடன் பாடில்லை. தயவு செய்து என் பிரிவில் வருந்தவோ வாடவோ செய்யாதே. இருப்பதாக நினைத்து கொண்டிருந்தால் துக்கம்
நெஞ்சடைக்கும். இறந்து விட்டதாய் நினைத்து கொள். உனக்காக நான் அழா விட்டாலும், உன்னை வருத்தியதற்காக என் ஆத்மா அழக் கூடும்.அதனால் மீண்டும் வேண்டுகிறேன் அழவோ உன்னை வருத்திக்கொள்ளவோ செய்யாதே.
இறுதியாக ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள் நான் பிரிவது, நீ எனக்கு வேண்டாம் என்றல்ல நான் உனக்கு வேண்டாம் என்றே.
இப்படிக்கு
மன்னிக்க முடியாவிட்டாலும் மறந்து விடென வேண்டும் ஆயிரம் முத்தங்களுடன் உன் "பித்தன்" .
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...