Philosophy
May 13, 2018
தத்துவம்
SHARE

https://m.facebook.com/story.php?story_fbid=575261716167391&id=100010507024645 ஒரு பூகம்பத்தை உண்டு பண்ணியது தான் என் பிறப்பு.பிறந்த பின்னும் அடிக்கடி புயல் வீச
செய்து கொண்டு தானிருந்திருக்கிறேன். அம்மா தான் பாவம். அன்றிலிருந்து இன்று வரை என்னால் வலி தாங்கி கொண்டிருக்கிறாள். சின்ன வயதில் இருந்தே எனக்கு அடிக்கடி உடம்பு
சரியில்லாமல் போய் விடும்.அதை நினைத்து நினைத்தே இழைத்து கிடக்கிறாள்.என் உடம்பு எலும்பும் தோலுமாய் இருப்பதெண்ணி அவள் தான் துரும்பாகி கொண்டிருக்கிறாள். ஒரு முறை.... இல்லை
முதன் முறையாக நான் வண்டியிலிருந்து கீழே விழுந்து கால் கை என காயம்பட்டு வந்து கட்டிலில் படுத்து கிடந்தேன். அவள் ஏதோ கள்ளக்காட்டுக்கு வேலைக்கு போய் விட்டு சாய்ந்தரமாய்
வந்தாள். வந்தவள் நான் படுத்திருந்த கட்டிலின் கால் மாட்டில் உட்கார்ந்து கொண்டு அழுத அழுகை... நினைத்தால் நீர் துளிக்கிறது. "நல்லா தாம்மா இருக்கேன் ஒன்னும்
இல்லை" என்று தையல் போட்ட உதட்டை கோணிக் கொண்டு ஒரு வித முணகலில் நான் சொல்லவும் "ஏன்டா இப்படி பண்ற... ஒரு பொறுமையே இல்ல.. உனக்குலாம் ஏதாச்சும்னா நான் உயிரோடவே
இருக்க மாட்டேன்" என்று முன்பினும் ஆழமாக அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் அழுத அழுகையை விட சொன்ன அந்த "உனக்குலாம் ஏதாச்சும் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்" என்ற
வார்த்தைகள் தான் எனக்கு என் உயிர் மீதொரு பற்றுதலை உண்டாக்கி கொண்டிருக்கிறது. // \\ என் இளைய நாட்களில் தம்பிக்கு நிறைய முத்தங்களும் கொஞ்சல்களும் போகும். எனக்கு கொஞ்சம்
தான் கிடைக்கும். நான் அப்பாவை போல கருப்பு. அவன் அம்மா வை போல நல்ல நிறம். அதை சுட்டி காட்டி அழுது தான் முத்தங்களும் கொஞ்சல்களும் வாங்குவேன். "அவன் வெள்ளத் தோலா
இருக்கான்றதால தான அவன கொஞ்சுற" னு சொல்லிட்டு அழுவேன்..உடனே என்னை வாரி அணைத்து அத்தனை வீரியத்தோடு கன்னம் கன்னமாக முத்தம் வைப்பாள். இப்போது நினைத்தாலும் அவள் தந்த
முத்தத்தின் ஈர்த்தை உணர முடிகிறது. இன்னும் சின்ன வயசில் தம்பி கைக்குழந்தையாக இருந்த நாட்களில்.. அப்போது எனக்கு ஒரு மூன்று வயசிருக்கும். அவனுக்கு பாலூட்டி கொண்டிருக்கும்
சமயத்தில் நானும் கட்டிலின் அருகில் போய் நின்று கொண்டு "எனுக்கு" என்பேன். "என் தங்கம்... தம்பி சோச்சி திங்க மாட்டான் டி அழகி." என்று செல்லமாக
சொல்வாள். ஆனால் நான் "எனுக்கும் சோறு வேண்டாம்.. பால் தான் வேணும்" என்று அழுவேன். அடிக்கமாட்டாள். உடனே கட்டிலின் சட்டத்தை பிடித்தபடி முகத்தில் பாவம் பண்ணிய படி
நின்று கொண்டிருக்கும் என்னை தூக்கி அவளுக்கு மற்றொரு புறமும் கிடத்தி எனக்கும் பாலூட்டுவாள்.அம்மா அம்மா தான். // \\ சின்ன வயசில் சோறுட்டியதை போல இப்போதும் ஊருக்கு போகிற
போதெல்லாம் அதே அன்போடு சோறூட்டுவாள். இன்னும் நான் அவளுக்கு குழந்தை தான். குளிக்கும் போது முதுகு தோய்த்து விடுவாள். துவைக்க மறந்து விட்ட உள்ளாடைகளை கூட துவைத்து
போடுவாள். எத்தனை கஷ்ட காலம் வந்தாலும் காய்ச்சல் வந்தாலும் "சாப்டியா தங்கம்" என்று கேட்டு விட்டே தூங்குவாள். வீட்டில் மூத்தவளும் இளையவனும் இருந்தாலும் என்னை
கேட்டுத் தான்.. அதுவும் எனக்கு பிடித்ததை தான் சமைப்பாள். // \\ எனக்கு யாருக்கும் கூப்பிட்டு பேசுகிற பழக்க மில்லை. வீட்டுக்கு கூட அப்படி தான். தினமும் தம்பியிடம் சொல்லி
missed call கொடுத்து என்னோடு பேசி.. என் குரல் கேட்டால் தான் அவளுக்கு தூக்கமே வரும்.ரெண்டு நாளைக்கு மேல் பேசாமல் இருந்து விட்டால் மூனாம் நாள் அழுதே விடுவாள். போன
வார்த்துக்கு முந்தின வாரம் அது தான் நடந்தது. என்னை பிரிந்தொரு நாளும் இருக்க மாட்டாள்.அவளை மறந்து நானும் இருந்ததில்லை. கூலி வேலை செய்தாலும் என்னை கஷ்டம் தெரியாமல்
வளர்த்தவள். வளர்ப்பவள். என் மீது எப்போதும் அவளுக்கு தனி பாசம். இப்படி அவளுடைய அருமை பெருமைகளை எல்லாம் சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். என் அம்மா என்று இல்லை எல்லா
அம்மா க்களும் இப்படி தான். ஆமாம் பெண்ணாய் பிறந்த எல்லோரிடத்திலும் தாய்மை இருக்கிறது. எல்லா பெண்ணிலும் ஒரு அம்மா ஒளிந்து கிடக்கிறாள். அவளை தாயாக பாவிக்கிற எல்லோராலும்
அவளின் தாய்பாசத்தை உணர முடியும். ஒரு குழந்தையை போல எந்த வித தப்புணர்வும் இல்லாமல் அணுகி பாருங்கள் எல்லா பெண்ணும் தாய் தான். நன்றி. எல்லோர்க்கும் அன்னையர் தின
வாழ்த்துக்கள்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...