Back

Philosophy

July 26, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

சின்னவன்
என் சிந்தைக்குள்
அடக்க முடியாத
அழுகுரல்கள்....

வற்றி விட்டது
கண் சுரப்பி.
இப்போது
துளிகள் இல்லை
துயர ஒலி மட்டும் தான்.

கேளுங்கள்.

கண்ணீரின் சூட்டோடு
கழன்று விழும்
இந்த வார்த்தைகளை
கேளுங்கள்.

என் இளைய
இதயத்து
பழைய துடிப்பின்
புதிய அழுகுரல் கேளுங்கள்.

துளைபட்ட மூங்கில் வழி
நுழைந்து இசையாய்
உரு கொண்டு வரும்
காற்றென
இந்த வரிகளின் வழியே வரும்
என் இயலாமையின்
புயல் மொழி கேளுங்கள்.

ஆயிரமாயிரம் அம்பேத்கர் வந்தாலும்
மாறாத இந்த மனித பூமியில்
தீராத சோகம் கொண்டு திரியும்
என் வலி மொழி கேளுங்கள்.

திரும்பும் திசையெல்லாம்
திருட்டு கொலை
கற்பழிப்பு கலவரம் என அவலங்கள்
நிற்காது நிகழ்ந்தேறும்
பொன்பூமி வாழும்
என் பொன்னான அழுகுரல் கேளுங்கள்.

உயிரின் மதிப்பு
ரூபாயில் எழுதப்படும்
சொர்க்கத்தில் வாழும்
இந்த அரூபனின்
அழு குரல் கேளுங்கள்.

கதிராமங்கலம் மக்கள் போல்
கேட்கும் காதுகள்
அதிர அழுதாலும்
உதிரும் துளிகளில்
உப்பெடுத்து விற்க துணிந்த
உயர் மனிதரோடு வாழும்
என் உள்ளக் குரல் கேளுங்கள்.

வறியார் மேலும்
வரி விதிக்கும்
பெரியோர் உலகில் வாழும்
சிறியவனின் சினக் குரல் கேளுங்கள்.

பெற்றப் பிள்ளையை
கற்பழிக்கும் தகப்பனும்
பெற்ற பிள்ளையை
விற்று பிழைக்கும் தாயும்
பெற்ற பிள்ளையை
சாதிப் பேர் சொல்லி சங்கறுக்கும்
பெற்றவர்களும் வாழும் பூமியில்
வாழும் வாலிப வயோதிகனின்
நரை குரல் கேளுங்கள்.

கேளுங்கள்
கேட்டுக் கொண்டு மட்டுமே
இருங்கள்

கண்ணீர் சுரப்பி போல்
என் எச்சில் சுரப்பியும் வறண்டு
இரத்த வாடையோடு வரும்
என் மரணக் குரலையும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...