Short story
September 13, 2021
சிறுகதை
SHARE

அன்புள்ள சகி, நெடு நாட்களுக்கு பிறகு நானெழுதும் கடிதம். நீ எப்படி இருக்கிறாய் என்று தெரிந்து கொள்ளும் ஆவலை விட எப்படி நீ என்னை மறந்து இருக்கிறாய் என்ற தவிப்பும் வலியுமே
அதிகம் எனக்கே. உன் நினைவுகளில் இருந்து விடுபடும் பொருட்டே ஊருரூராய் பயணம் போகிறேன். ஆனால், அவை எல்லாம் என்னுள் உன் நினைவையே தூண்டி விடுகின்றன. கிளை வளர் மீன் முள் போல
என்னை கிழித்து துளைக்கிறது நம் பழம் நாட்களின் நினைவுகள். எங்கு காணினும் நின் காதலே. சகி என்னிடம் வா அல்லது என்னை உன்னிடம் வர அனுமதி. கால் விழுந்தழுதேனும் மீண்டும் அந்த
ஆழம்படர் காதலை அனுபவிக்க வேண்டும். உனக்கேன் என் தவிப்பு புரிய மாட்டேன் என்கிறது? சாகாமலே சவத்திற்கொப்பாக கிடக்கிறேன் சகி. கொடும் வெயில் கோடையில் கிடைத்த நெடுமர நிழலாக
எனக்கு வந்து வாய்த்து விட்டு, சுடும் மணல் பாலையாய் இப்படி துயர் கூட்டி வதைப்பது சரியா? விரல் பட இதழ் பட இறுக அணைத்து கிடந்த காலங்கள் காணாமல் போனதெங்கு? முதன் முதலாய்
என்னை பயணங்களுக்கு பழக்கியவள் நீ தான். தாபம் பொங்க தண்ணிரவு பொழுதுகளில் நாம் மேற்கொண்ட பயணங்களை எப்படி மறந்தாய் நீ? குளிர் தாங்க முடியாமல் நான் நடு நடுங்கி முணகும் போது
உன் சிறு கரங்களால் என் உடல் தேய்த்துரசி உஷ்ணம் கூட்டி எனை தேற்றிய அந்த அக்கறைய மிகுந்த அணைப்பும் காதலும் எங்கு போனது சகி? கூடி கிடந்த பொழுதுகள் எண்ணி வாடிக் கிடக்கும்
என்னை தேற்ற வர மாட்டாயா? யாதும் துறந்து எதன் மீதும் பற்றற்று வாழ நினைத்தவன் உனக்காக, உன்னைப் பற்றிக் கொள்ள யாரையும் எதையும் ஏன் என்னையுமே துறந்து வேண்டுகிறேன். என் ஆறாத
காயங்கள் ஆற்ற, தீராத காதல் கொண்டு வா. மாரோடு அணைத்துக் கொள். சகி, நான் வாழும் ஒவ்வொரு கணத்திலும் , வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்திலும், போகும் எல்லாம் வழிகளிலும் உன்
வாசம் என்னை பின் தொடர்ந்து வருகிறது சகி. என்னால் உன்னை பிரிந்து மறந்து இருக்க முடியவில்லை. என்ன நான் செய் வேண்டும் உன்னை சேர? ஒரு மலரென கிள்ளி என் உயிரை உன் கையில்
தரவா? சிறு இசையென மீட்டி என் காதலின் துடிப்பை பாட்டாக்கி தரவா? சொல் சகி. உலக உலா போவதாக, ஒருவருக்கொருவர் குழந்தை என ஆவதாக, நான் கண்ட, பேசிய எதிர்கால கனவுகள் எல்லாம்
பொய் தானா? அவை நிகழச் சாத்தியமில்லையா சகி? ஆமாம் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாய் நீ? என்னை நினைப்பாயா? உனக்கு என் ஞாபகம் வருமா? இல்லை என்னை நினைக்கும் அளவுக்கு
உனக்கு நேரமும் நெஞ்சில் ஈரமும் இருக்குமா? உன் மார்பில் பட்ட என் எச்சில் போல என் மீதிருந்த உன் காதலும் காய்ந்துலரந்து காணாமல் போய் விட்டாதா? ஒரு வேளை நீ பேச வேண்டுமென
நான் ஏங்கித் தவிப்பது நீயும் ஏங்கி தவிக்கிறாயோ? இல்லையே, நான் வந்து பேசினாலே தொல்லை பண்ணாதே என்றென்னை துரத்தியல்லவா அடிக்கிறாய். சகி, கருணையின் அடிப்படையிலாவது மீண்டும்
என்னை காதலியேன். சகி.....
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...