Poem
May 26, 2017
கவிதை
SHARE

பெண்ணொருத்தி முன்துருத்தி நிற்கும் முலையறுத்துப் பொன்னொரு கையேந்தி விண்ணதிர பேசுகிறாள் கண்ணகியோ என்றென் கண்களைக் கசக்கி எண்ணெய் விட்டெதிர் நோக்க யாரிவளென்று? எண்ண
அலைகள் மோதி மோதி கண்ணாடி உள்ளம் உடைக்க! பெண்ணவள் கருநிற உதட்டில் ஈரம் சேர்த்து ஆரம்பம் செய்கிறாள் "புதையலுக்கா? என்னுடல் புதைதலுக்கா? ஏனென்னை நாடி வந்தான்.
புதுப்புது கவிபாடி அன்புடன் உரையாடி நேசப் போதை ஊட்டி நெஞ்சில்நின்(று) பாச வலையில் வீழ்த்தி என்னைவிட்டு எங்கோடிப் போனான்? இன்னமும் அவனென் அங்கம் கூடத் தீண்டான் என்றாலும்
என்றோ கற்பிழந்தேன் என்பால்! ஆமாம் ஊனோடு ஊனினைந்து மோக ஈர்ப்பினால் புலன்கள் புணவர்தால் மட்டும் கற்பின் நலனது கெடுவதில்லை! நெஞ்சினில் ஒருவனை நினைத்திடும் பொழுதே கற்புத்
தீயது அணைந்து போகிற(து)! அணைந்தும் போனது! கெட்டுப் போனவள் என்றென்னை ஊரே சுட்டுப் பேசவும் சுகக்கே டில்லை. விட்டுப் போனவன் தொட்டு இன்பம் கூட்ட வேண்டாம்! கூடிப் பிரிந்ததன்
விடையதை சொன்னால் போதும்! என்மேல் மடையுடை வெள்ளம் என்று அன்பை அள்ளிப் பொழிந்தது பொய்யா? நிஜமென்றால் தள்ளி நின்றென்னை தள்ளாட வைப்பதேன்? முள்ளுள்ள பூவென அவனது நேசம்
உள்ளிருந்து மெல்ல என்னுயிர் தைக்கிற(து). அடே!என் அன்பு டையவனே! என்னை கடன்காரி யாக்கி காணாமல் போனதேன்? உன்னன்பு மெய்யோ? பொய்யோ? நானறியேன். என்றாலும் மெய்யாலும் உள்ளம்
மகிழ்ந்தேன். அதற்கு பதில் பாசம் காட்ட வேணும் முதலும் முடிவுமாய் ஒருவாய்ப்புத் தாடா! என்மணிக் கழுத்தில் தாலி இல்லாது போனாலும் நானுன் மனைவி தானடா! என்மாமா" என்றவள்
மூச்சுவிடக் கண்டேன் 'கலியுகக் கண்ணகி' அவளை! என் "அன்புடையவளுக்கும் அன்புக்குரியவளுக்கும்" கவிதை தொகுப்பில் இருந்து.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...