Short story
July 11, 2021
கத போலத் தோனும் இது கதயும் இல்ல.
SHARE

இதை ஏன் இந்தக் கதையின் தலைப்பாக தேர்ந்தேனென்றால் இது இளையராஜா பாடலின் வரி. எனக்கு ராசாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
எனக்கு ராசாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதான். இசை என்பது வெறும் காற்றில் மிதக்கும் அதிர்வுகள் தானே. காதல் என்பதும் வெறும் மூளைக்குள் சுரக்கும் வேதியியல் திரவங்கள் தானே. ஆனால், கண்ணுக்குத் தெரியாத அந்த அதிர்வும் திரவமும் சேர்ந்து ஒரு மனிதனை எப்படிச் சுவரில் அறையப்பட்ட வெற்று ஆணியாக மாற்ற முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை இப்போது என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கலாம். கொஞ்சம் பொறுங்கள், நான் என் காடாய் வளர்ந்த தாடியைக் கோதி விட்டுக்கொள்கிறேன். நீங்கள் கற்பனை செய்யும் ஒரு ‘பகட்டுத் தத்துவவாதிக்கு’ கொஞ்சம் கம்பீரம் வேண்டாமா?
சரி கதைக்கு வருகிறேன். இது என்னைப் பற்றி நானே எழுதும் கதை. தன்னைப் பற்றி தானே எழுதிக் கொள்வது கதையாகவே இருந்தாலும் கதையாகாதில்லையா. அதனாலே "கத போலத் தோனும் இது கதயும் இல்ல" என்று தலைப்பு. இது கதையா கதையில்லையா என்று குழப்பமாயிருக்கிறதில்லையா? எனக்கும் தான்.
சில நேரங்களில் நான் சொல்வது நடந்ததா, நான் கற்பனை செய்தேனா என்று கூட நினைவிருக்காது.
இந்தக் கதையில் வரும் அவள் உண்மையிலேயே இருந்தாளா என்று கூட சில நேரங்களில் எனக்கு சந்தேகம் வருகிறது.
இப்போதெல்லாம் அடிக்கடி எதெதோ எண்ணங்கள் தோன்றுகின்றன. அத்தனையும் அனாவசியமானவை. சல்லிக் காசுக்கு பிரயோசனமில்லாதவை. உறக்கத்தை கெடுத்து மனசை உளைச்சலுக்குள்ளாக்கும் எண்ணங்கள். பிடித்திருந்தவை கூட பிடிக்காமல் போய் விட்டது. எப்போதும் எதன் மீதும் ஒரு நம்பிக்கை இல்லாத தன்மை. அடிக்கடி செத்து போகலாம் போல தோன்றுகிறது. இது போதாதென்று எனக்கு நானே யாரோ கேட்பது போல கேள்விகள் கேட்டு பதில் எழுதுகிறேன். எனக்கு நானே யாரோ ஒரு பெண் எழுதுவது போல கடிதங்கள் கவிதைகள் எழுதுகிறேன். உள்ளிருந்து எதாவது ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரே மண்டகடுப்பு. மனக்குடைச்சல்.
ஆனாலும் இதிலொரு சுவாரஸ்யம் இருக்கிறது. நான் கேட்கும் அபத்தமான கேள்விகளுக்கு என்னிடமிருந்து வரும் பதில்கள் அதிபயங்கரமான தர்க்கத்தோடு (Logic) இருக்கின்றன. தனிமை என்பது ஒரு விசித்திரமான தவம். அந்தத் தவத்தில் கடவுள் எல்லாம் நேரில் வரமாட்டார்; நாமேதான் கடவுளாகி நமக்கு நாமே வரம் கொடுத்துக்கொள்ள வேண்டும். நான் எனக்குக் கொடுத்துக் கொண்ட வரம்தான் இந்தத் தொடர் பித்துநிலை. அறையின் நிசப்தத்திற்கு இத்தனை எடை இருக்கும் என்று முன்பு எனக்குத் தெரியாது. இப்போது சுவரில் பல்லி அடிக்கும் சத்தம் கூட, அவளது கொலுசின் ஓசையாகக் கேட்கும் மாயக்கண்ணாடிக்குள் நான் மாட்டிக்கொண்டேன்.
மேலே பார்க்கிறேன். மின்விசிறி சுற்றுகிறது. மூன்று இறக்கைகள். ஒன்றையொன்று இடைவிடாமல் துரத்துகின்றன. ஆனால் கடைசி வரை ஒன்றையொன்று தொடவே முடியாது. என் எண்ணங்களும் அப்படித்தான். நேற்றைய நினைவை இன்றைய நிஜம் துரத்துகிறது, ஆனால் எதையும் எட்ட முடியவில்லை. இந்த மின்விசிறிக்குத் தான் ஏன் சுற்றுகிறோம் என்று தெரியுமா? கரண்ட் இருக்கிறது, சுற்றுகிறது. எனக்குள் என்ன இருக்கிறது? முரண் இருக்கிறது. முரண்பாடுகளின் மொத்த மூட்டை நான். மின்விசிறி சுழன்று சுழன்று ஒரு வட்டத்தை உருவாக்குகிறது. வட்டம் என்றால் என்ன? சுழியம். பூஜ்யம். சுழியம் தான் சூனியம். நான் சுழன்று கொண்டிருக்கிறேன். எனக்குள் நானே சுற்றுகிறேன். சுற்றிக் கீழே விழுந்தால் தரையாவது இருக்கும். ஆனால் நான் எங்கு விழுகிறேன் என்றே தெரியாமல் விழுந்துகொண்டே இருக்கிறேன். தரை எப்போது வரும்? வந்தால்தானே அடிபட்டுச் சாக முடியும்?
ஒருநாள் இணையத்தில் ஏதோ படித்தேன். அதிலிருந்த எல்லா அறிகுறிகளும் என்னுடையதாகத் தோன்றின. மறுநாள் வேறு ஒன்றைப் படித்தேன். அதுவும் நான்தான். இப்போது நான் என்ன நோயென்று தெரிந்து கொள்ள விருப்பமில்லை; என்னை விட்டுப் போனது என்ன என்பதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
பைத்தியம்... பைத்தியக்காரன்... வார்த்தைகளைத் திருப்பிப் போட்டுப் பார்க்கிறேன். பையத் தீயைக் காரன். உள்ளுக்குள் பையப் பைய எரியும் ஒரு தீ. அதைக் காவித் திரியும் காரன்... அதான் பைத்தியக்காரன். அப்படியானால் நான் பைத்தியக்காரன்தான். எனக்குள் எரிகிறது. சுட்டுப் பொசுக்காமல், மெல்ல நிதானமாக, அணையாமல் எரியும் தீ. வார்த்தைகளை வைத்து விளையாடுவது எனக்குப் பிடிக்கும். இப்போது வார்த்தைகள் என்னை வைத்து விளையாடுகின்றன. 'தனிமை' - இதில் 'தனி' இருக்கிறது, 'மை' இருக்கிறது. என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டு பூசிக்கொள்ளும் இருட்டு மை. 'கடிகாரம்' - நேரம் செல்லச் செல்ல அது என் மூளையைக் கடிக்கின்ற காரம். மனம்... வனம்... பிணம். என் மனமாகிய வனத்தில் இப்போது என்ன நடக்கிறது? ஒரு பிணம் எழுந்து நடந்து கொண்டிருக்கிறது. எனக்கே சிரிப்பு வருகிறது. பைத்தியங்களுக்கு எதுகை மோனை இவ்வளவு சரியாக வருமா என்ன? ஒருவேளை கவிஞர்கள் எல்லோரும் பைத்தியங்கள் தானோ? இல்லை, பைத்தியங்கள் எல்லாம் கவிஞர்கள் தானோ?
நான் தனிமையை அதிகம் விரும்புகிறேன். புற உலகில் இருந்து துண்டித்து கொண்டால் தேவலாம் என்று எண்ணுகிறேன்.என்னை நானே பராமரிக்கத் தவறுகிறேன். முகச்சவரம் செய்து கொண்டு வருசமாகிறது. தாடி, காடாய் வளர்ந்திருக்கிறது. இதில் மேலுதட்டை மறைத்து வளர்ந்திருக்கும் மீசை குத்தல் பிடித்திருக்கிறதாம் அவளுக்கு. முத்தம் பண்ணிக் கொள்ளும் போது சொன்னாள்.
சில மதியங்களில் நான் ஏதேனும் ஒரு புத்தகத்தில் தீவிரமாக மூழ்கியிருப்பேன். பின்னாலிருந்து சத்தமில்லாமல் வந்து, என் தோள்பட்டையில் தன் முகவாயை வைத்து அழுத்திக்கொண்டே, என் சட்டையின் முதல் இரண்டு பட்டன்களைத் தளர்த்துவாள். கழுத்தெலும்பின் ஓரத்தில் அவளது மூச்சுக் காற்றும், ஈரம் கசியும் உதடுகளும் பதியும் அந்த முதல் ஸ்பரிசத்தில், என் கைகளில் இருந்த புத்தகத்தின் அத்தனை தத்துவங்களும் தோற்றுப்போய் நழுவி விழும். காமத்திற்கு முன்னால் தர்க்கங்களுக்கு என்ன வேலை? "படிக்கிறியா, இல்ல..." என்று அவள் கண்களைச் சிமிட்டும் அந்தப் பாவனையில் உலகத்தின் அத்தனை சிறுக்கித்தனமும் அடங்கியிருக்கும். மூச்சிரைக்க அவளை இழுத்துப் போர்த்திக்கொள்ளும் அந்தப் பகல்நேர இருட்டில்தான் எனக்குப் பிரபஞ்சத்தின் அத்தனை வெளிச்சங்களும் கிடைத்தன. இப்போது அந்தப் புத்தகம் அப்படியே மடிக்கப்பட்டுக் கிடக்கிறது; அவளது விரல்கள் தீண்டிய அந்தப் பக்கத்திலிருந்து நான் அடுத்த பக்கத்திற்கு நகரவே இல்லை.
இன்னும், எனக்கு நானே பேசிக் கொள்கிறேன். என் மன உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குகிறேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட யாரேனும் எனக்குப் பிடித்த ஒரு பெண்ணை, மாரழுந்த அணைத்து முத்தம் தரலாம் போலிருக்கிறது. ஆனால் இதை எல்லாம் எப்படி வெளிக்காட்டுவது அல்லது வெளிச்சொல்வது.
நேற்று இணையத்தில் தற்செயலாக ஒரு வரியைக் கடந்தேன். "சில மனங்களோடு தர்க்கம் செய்து வெல்லவே முடியாது. அவர்களின் நியாயங்கள் எந்தப் பொதுவிதிக்குள்ளும் அடங்காது; அவர்கள் பயணிக்கும் பாதையே வேறு" என்று எழுதியிருந்தது. சடக்கென அவள் முகம் ஞாபகத்திற்கு வந்தது. "உன்கிட்ட பேசி ஒரு நாளும் ஜெயிக்க முடியாதுடா... நீ எதையும் உனக்கு ஏத்த மாதிரிதான் புரிஞ்சுக்குவ," என்று அடிக்கடி சலித்துக்கொள்வாள் அவள்.
அப்போது, என் அபாரமான அறிவுஜீவித்தனத்தைக் கண்டு அவள் மலைக்கிறாள் என்று எனக்கு நானே பெருமைப்பட்டுக் கொண்டேன். ஆனால் இப்போது அந்த வரியை வாசிக்கும்போதுதான் உறைக்கிறது... நான் கட்டியெழுப்பிய தர்க்கங்கள் எல்லாம் ஒரு பித்தனின் பிரமைகளா? நான் பேசிக்கொண்டிருந்த அந்த வேறு உலகத்தின் பாஷை அவளுக்குப் புரியவில்லையா, இல்லை என் பித்துநிலையை அவள் அப்போதே கணித்திருந்தாளா?
இல்லை... இப்படி யோசிப்பதே கூட, நான் எனக்காகவே மீண்டும் கட்டிக்கொள்ளும் இன்னொரு தர்க்கமோ? எது நிஜம், எது என் மூளை கற்பனை செய்துகொண்ட மாயை என்று இப்போது எனக்கே தெரிவதில்லை. ஒருவேளை, என்னோடு வாதாடி தோற்றுப் போனதில் அவளுக்குத்தான் எத்தனை வலிகள் இருந்திருக்கும்!
அவள் என்றதும் நிறைய தோன்றுகிறது.
அவளுக்கு ஒரு பழக்கம். நான் எவ்வளவு சீரியஸாகப் பேசினாலும், திடீரென்று என் மூக்கைப் பிடித்து ஆட்டிவிடுவாள். அந்த ஒரு நொடியில் எல்லா தத்துவமும் தோற்றுவிடும். உலகத்தைப் புரிந்துகொள்வதைவிட, ஒருவரால் குழந்தையாக்கப்படுவது பெரிய சந்தோஷம் என்று அப்போது தெரியவில்லை.
அவளது ரவிக்கையின் பின் கொக்கியை மாட்டிவிடச் சொல்வாள் சில காலைகளில். எனக்குத் தெரிந்தாலும் தெரியாதது போல் தாமதப்படுத்துவேன். கழுத்துச் சரிவில் படர்ந்திருக்கும் பூனை முடிகளில் மெலிதாக மூச்சுக்காற்றை ஊதுவேன். "ஏய்... நேரம் ஆகுது, தள்ளிப் போ" என்று சிணுங்கிக் கொண்டே சற்றே பின்னால் சாய்ந்து என் மார்பில் தஞ்சம் புகுவாள். அவளது துணிக்கும் முதுகுக்கும் இடையிலான அந்தச் சிறு இடைவெளியில்தான் என் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அடங்கியிருந்தது. அவசர அவசரமாகக் கிளம்பும் அந்தப் பரபரப்பான காலைகளில், அவளது விலாப்புறத்தில் நான் வைக்கும் ஒரு தீடீர் முத்தமும், அதற்கவள் பதறித் துள்ளும் அழகும்... அடடா! எந்தப் பேரிலக்கியமும் அந்தத் துள்ளலுக்கு ஈடாகாது. ஒரு பெண்ணின் அவசரம் காமத்திற்கு எவ்வளவு அழகான திறவுகோல் என்பது அவளுக்குக் கொக்கி மாட்டிவிடும் ஆண்களுக்கே தெரியும்.
அவள் அழகி. உண்மையில அவள் அழகில்லை என்றாலும் எனக்கு அவள் தான் பேரழகி. ரூமி வரிகளில் சொன்னால் "எவளும் உனக்கு நிகரில்லை. நீ என் காதலி என்பதால்". ஆனால் உண்மையில் இங்கு யாரும் யாருக்கும் நிகர் இல்லை. அவரவர்க்கு அவரவரே நிகரில்லை யா? சரி இருக்கட்டும்.
ஒரு மனிதரை காதலித்த பிறகுதான் உடல் என்பது உறுப்புகளின் கூட்டுத்தொகை அல்ல என்று புரிகிறது. அது பழக்கங்களின் வரைபடம். எந்தக் கையைப் பிடித்தால் அவள் விரல்கள் சற்றே இறுகும், எந்த வார்த்தையைச் சொன்னால் தோளில் சாய்வாள், எங்கே முத்த்மிட்டால் கண்களை மூடுவாள்... இப்படிப்பட்ட ரகசியங்கள்தான் காதலின் உண்மையான உடலமைப்பு.
அவளைப் பற்றி எழுதிய ஒரு கவிதை, மிக அந்தரங்கமானது தான் என்றாலும் சொல்கிறேன். பூக்களில் பொடி செய்து /வாகாய் வனைந்த / மெல்லிய ஆகிருதி /உன்னில் - வழியும் வியர்வைக்கு /தேனின் ஊட்டம். / பார்க்கும் பார்வையில் / ரோஜா முள்ளின் கூர்மை / முலையின் காம்பில் / தாமரை மொட்டின் கூர்மை / திராட்சை கனியின் நீர் மை. / உரலென - நடு சிறுத்து! முத்த எச்சில் நிரப்ப / தொப்புள் குழிகொண்ட / வளைந்த வடிவிடை. / நுங்கின் கண்ணென / சுவை நீர் சுரக்கும் / கருஞ்சிகை அடர்ந்த / சிறு சுனையல்குள். / உறை களைந்த /வீணைத் தண்டென / மீட்டலுக்கு ஆயத்தமாய் / பச்சை நரம்புகள் படர்ந்த நெடுந் தொடை. / ஒட்டி அடுக்கிய - ரெட்டை அரை வட்ட / கடிக்க இனிக்கும் /கனிச்சதை பிருஷ்டம். / தோராயமாக / வாழ்நாள் முழுக்க /ஓயாமல் ஆராய வேண்டிய /ஒப்பரிய பொக்கிசமடி நீ. வாசிப்பது பெண்ணாக இருந்தால், இந்த 'நீ' உங்களுக்குள்ளும் எங்கேனும் ஒரு மச்சமாகவோ, சிறு ரேகையாகவோ ஒளிந்திருக்கக்கூடும். ஏனென்றால், அவளைத் தொலைத்த பின், இப்போது நான் காணும் எல்லாப் பெண்களின் முகங்களிலும் அவளின் ஒரு சாயலையாவது, ஒரு சிறு அசைவையாவது கண்டடைந்து விடுகிறேன். அவளின் சிரிப்பு, அவளின் கோபம், அவளின் நடை என அனைத்தையும் மற்ற பெண்களிடம் பிச்சை கேட்கிறது என் மனம். இது காதலா, பித்தா, இல்லை அவளைத் திரும்பப் பெற முடியாத கையறுநிலையின் கோமாளித்தனமா என்று தெரியவில்லை.
ஒரு முறை எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை. அதன் பின்னணியிலும் உளவியல் காரணமே இருந்திருக்கிறது. ஆனால் அது அப்போது தெரியவில்லை. என்ன சண்டை என்றால் பொதுவாக எல்லா பெண்களுக்கும் இருக்கிற ஒரு உடற் செயலில் தொடர்பான சண்டை தான். அவள் எப்போதும் மாதவிடாய் ஆனதை ஆவதை என்னிடம் சொல்லி விடுவாள். அப்படி சொன்னதை நினைவில் வைத்திருக்கிறேனா என்று சோதிக்கிற பொருட்டு ஒரு முறை என்னிடம் கடந்த மாதம் எப்போது நாளானது என்று கேட்டாள். எனக்கு நினைவில் இல்லை. சும்மா வெறுமனே பொய்யாக எதாவது ஒரு தேதியைச் சொல்லி சமாளிப்பதற்கு பதில் மறந்து விட்டேன் என்று உண்மை சொன்னேன். ஆனால் அதற்கு அவள் பட்ட கோவம் இருக்கிறதே. அப்பப்பா. எவ்வளவு சண்டை.
அடுத்த சில நாட்களிலேயே அவளுக்கு மாதவிடாய் வந்தது. அப்போதுதான் அவள் அன்றைய கோபத்தை நான் வேறு விதமாக நினைக்க ஆரம்பித்தேன். சில விஷயங்களை காதலர்கள் சண்டை போட்ட பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்தக் கதையை வாசிக்கிற ஆண்களைக் கொஞ்சம் விழிப்படையச் செய்யும் பொறுப்பு இந்தக் கதையின் நாயகனான எனக்கு உள்ளது. அந்தச் சம்பவத்திற்கு பிறகு நான் அவள் நாளாகும் தேதியை என் டைரியில் குறித்து வைத்துக் கொள்வேன். அதன் படி அவளை ஓரளவு புரிந்து நடந்து கொண்டேன். ஆனால் எவ்வளவு முயன்றும் எனக்கும் அவளுக்குமான உறவைக் காப்பாற்றி தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
இது பற்றி கூட ஒரு கவிதை எழுதினேன். "பழுத்து /பாதி காய்ந்து /சருகாகி விட்ட பின்னும் / பாதி தொங்கலாய் / பற்றிக் கொண்டிருக்கிறது / அந்த இலை /கிளையை. / அதற்கு தெரியாது போலும்/ பிரியம் அலை அலையாய் / நுரைத்துப் பொங்க பற்றிக் கொண்டாலும் / உதிரும் காலம் வந்தால் /உதிர்ந்தே தான் ஆக வேண்டும் என்பது." உண்மை தானே.
எங்களின் உறவு முறிவுக்கு அவள் நிறைய காரணங்கள் சொன்னாள். இருந்தாலும் அந்தக் காரணங்களையும் அவளின் பிரிவையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு நான் இப்படி அதாவது இந்தக் கதையின் படி ஸ்கிசோஃப்ரினியாவால் பாதிக்கப்பட்டவனானேன். தலையணை முனைகள் எல்லாம் குத்தாமல் குத்தும் அவள் மார்பையே நினைவூட்டித் தொலைத்தன. என்ன செய்வது அவள் பிரிவை ஈடுகட்டத் தான் எனக்கு நானே கவிதை கடிதம் எல்மாம் எழுதத் தொடங்கினேன். ஆனால் அது இப்படியொரு மனநோயாக மன்னிக்கனும் இதை நோய் என்று சொல்வது தவறு. மனநலம் பாதிக்கபடுதல் என்பது நோய் இல்லை. அது எதாவது ஒரு இழப்பின் வலி. அவர்களை நோயாளி என்று சொல்லாதீர்கள். என்னையும் தான். அப்படி கவிதையும் கடிதமும் எழுத தொடங்கி நாளில் தான் தொடங்கியது இப்படியான ஒரு மனப் பிறழ்வு. ஒரு பிரிவின் வலி தாங்காமல் வந்த, இந்த மனப் பிறழ்வினால் இப்போது எல்லா உறவுகளையும் இழந்து என்னையும் இழக்கும் நிலையில் இருக்கிறேன்.
மனம் ஒரு குப்பைத்தொட்டி. இல்லை இல்லை, மனம் ஒரு காலநிலைக் கருவி. எப்போது மழையடிக்கும், எப்போது வெயில் சுட்டெரிக்கும் என்றே தெரியாத பைத்தியக்கார வானிலை. பித்து... அற்புதம்... அகோரம்... எல்லாம் எனக்கு ஒன்றுதான். அழகைப் பார்த்துப் பார்த்து அகம் உருகி, இப்போது அகமே இல்லாமல் அலைகிறேன். தனிமையின் இருட்டில் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளின் கண்களுக்குள் எனக்கு ஒரு பெருங்கடல் தெரிகிறது. அந்தக் கடலில் குதிக்க எனக்கு நீச்சல் தெரியாது, ஆனாலும் மூழ்கிச் சாகத் தயாராக இருக்கிறேன். ஏனென்றால், தனிமையின் கரையில் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ந்து சாவதை விட, ஏதாவதொரு காதலின் கடலில் மூழ்கிச் சாவது எவ்வளவோ மேலானது இல்லையா?
தற்கொலை எண்ணம் அடிக்கடி தலைத்தூக்குகிறது. இப்படியான தருணங்களில் எனக்கு துணையாக இருந்த ஒரு தோழி இருக்கிறாள். ஆனால் அவளும் இப்போது என்னோடு இல்லை. ஏனென்றால் "உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என் கிட்ட கேளு" என என்னிடம் சொல்லி இருந்தாள். எனக்கு அப்போது எதாவது ஒரு பெண்ணின் உடல் மற்றும் மன நெருக்கம் ரொம்ப வேண்டியதாக இருந்தது. அதனால் "can you spend one night with me" என்று கேட்டேன். என்ன ஏது நான் எப்படி என்று கூட யோசிக்க வில்லை. என்னைய என்ன நெனைச்ச என்று ஓங்கி ஒரு அறைவிட்டாள்.
அப்போது தான் புரிந்தது ஒரு கதையில் படித்த " பெண்களுக்கும் உடல் வலிமை உள்ளது. ஆனால் அதை அவர்கள் உபயோகிக்கும் சந்தர்பபம் அமையவில்லை" என்ற வரிகளில் இருந்த உண்மை. எவ்வளவு வலி.
அந்த அறை... என்னை என் பிரமையிலிருந்து விழிப்படையச் செய்து, சட்டென நிஜத்தின் கடினமான தரையில் வீசியது. அவளின் விரல் ரேகைகள் என் கன்னத்தில் சிவந்து பதிந்திருந்தன. அந்த நொடியில், சுரீரென்ற அந்த வலிக்கு பதிலாக எனக்குச் சிரிப்பு தான் வந்தது. பித்துப்பிடித்த சிரிப்பு. பல மாதங்களான தனிமைப் பெருவெளிக்குப் பின், ஒரு மனுஷியின் ஸ்பரிசம் என் மீது பட்டிருக்கிறது. அது கோபமாக இருந்தாலும், வன்முறையாக இருந்தாலும், அது உயிருள்ள ஒரு நிஜமான தொடுதல்.
சட்டென கவிஞர் நேசமித்திரனின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது.
"மிகவும் வலிக்கிறது. / இன்னொரு கன்னத்தில் / யாராவது அறையுங்களேன் / இந்த வலி மறக்க."
ஆனால், கன்னத்தில் விழுந்த அறையின் சிவப்பும் வலியும் சில மணி நேரங்களில் மறைந்துவிடும். அன்பின் போதாமை தரும் வலி இருக்கிறதே, அது காலத்திற்கும் உள்ளுக்குள் தகித்துக்கொண்டே இருக்கும் தீ. அதனால் அந்தக் கவிதையை எனக்கு நானே இப்படித் திருத்திப் பார்த்துக் கொண்டேன்:
"மிகவும் வலிக்கிறது / இன்னொரு முறை / யாராவது காதலியுங்களேன் / இந்த வலி மறக்க."
ஆம், அறையை விட அன்பின் போதாமையே எப்போதும் உச்சபட்ச வலியைத் தருவதாக இருக்கிறது.
இப்போது என் இடது கன்னம் இன்னும் லேசாக மரத்துப் போயிருக்கிறது. மனமோ முற்றிலும் மரத்துப்போய்க் கிடக்கிறது. வலது கன்னம் மட்டும் காலியாக இருக்கிறது; காதலுக்காகவோ, அல்லது குறைந்தபட்சம் இன்னொரு அறைக்காகவோ காத்தபடி.
கதையின் முடிவில் உங்களைத்தான் கேட்கிறேன். சொல்லுங்கள்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? காதலிக்கப் போகிறீர்களா? இல்லை அவளைப் போல ஓங்கி அறையப் போகிறீர்களா?
எதுவானாலும் சம்மதமே... எனக்கு இப்போது ஏதாவதொரு தொடுதல் தேவைப்படுகிறது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...